rp

Blogging Tips 2017

கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?தினத்தந்தி கட்டுரை

வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டு ஆசிரியர் கொலை மாணவன் வெறிச்செயல்...
இப்படிப்பட்ட சம்பவங்கள் வெளிநாடுகளில் எங்காவது நடப்பது உண்டு. அவை ஒரு சிறு செய்தியாக நம்மூர் பத்திரிகைகளில் இடம் பிடிக்கும். எங்கோ கண்ணுக்கு தெரியாத தேசத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களை கேட்டாலே நம் நெஞ்சும் பதறியது.
நம் கண்முன்னால் பாதை மாறி செல்லும் மாணவர் சமுதாயத்தை பார்த்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ரத்த கண்ணீர் வடிக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்ல நாட்டில் உள்ள குழந்தை ஏசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் சுரேஷ் மாணவர்களாலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகதத்தையே அதிர்ச்சியல் உறைய வைத்துள்ளது.

மாணவிகளை கிண்டல் செய்தது, கல்லூரியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது போன்ற காரணங்களுக்காக டேனிஸ், பிரபாகரன் ஆகிய இரு மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர் பிச்சைக்கண்ணுவுடன் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே போட்டு தள்ளிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டில் சிவில் என்ஜினீயர், ஏரோநாட்டிகல் என்ஜினீயர் என்ற பட்டங்களோடு கல்லூரியை விட்டு வெளியே வரவேண்டியவர்கள் ‘கொலைகாரன்’ என்ற பட்டத்தோடு ஜெயிலுக்குள் சென்று இருக்கிறார்கள்.
சென்னை பாரிமுனையில் 9–ம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையிலேயே உமா மகேசுவரி என்ற ஆசிரியையை குத்தி கொலை செய்தான்.
சென்னை கல்லூரி செல்லும் மாணவர்களில் சிலர் நோட்டு புத்தகங்களை எடுத்து செல்ல மறந்தாலும் கத்தி எடுத்து செல்ல மறப்பதில்லை. மோதல்கள் தொடக்க நிலையாகவே உள்ளது.
அடிக்கடி கத்தியுடன் மோதி கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. பல கல்லூரிகள் போலீஸ் பாதுகாப்புடனேயே செயல்படுகிறது.
வல்ல நாட்டில் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிந்திய ரத்தம் காய்வதற்குள் புதுக்கோட்டை தனியார் கல்லூரி முதல்வர் சிபி செல்லையாவுக்கு சந்தன மாரியப்பன், விக்னேஷ் என்ற இரு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் மாணவிகளை கேலி செய்ததால் பெற்றோரை அழைத்து வரும்படி சிபி செல்லையா கூறி இருக்கிறார். காசு கொடுத்து இவர்தான் என் மாமா என்று ஒருவரை ‘செட்டப்’செய்து அழைத்து சென்று இருக்கிறார்கள். அதை முதல்வர் கண்டுபிடித்து கண்டித்துள்ளார். இது தான் அந்த மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.
வாழ்க்கையில் எந்த உயரத்தில் இருந்தாலும் கற்று தந்த ஆசிரியரை பார்த்தால் கைகூப்பி வணங்கி மரியாதை செலுத்தும் பண்பாடு நிறைந்தது தமிழ்நாடு...
ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமே தனது ஆசிரியர்களை இன்றளவும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி வருவதே அதற்கு ஒரு உதாரணம்.
அந்த பண்பு கொஞ்சம் கொஞ்சமாய் சிதைகிறதே...!
புத்தக பைகளுக்குள் அரிவாளும், கத்தியும் குடிபுகுந்து விட்டதே...!
புத்தியை தீட்ட வேண்டியவர்கள் கத்தியை தீட்ட துணிந்துவிட்டார்களே...! எங்கே செல்லும் இந்த பாதை?
எத்தனையோ கனவுகள்... ஆசைளுடன்... ஒவ்வொரு பிள்ளையையும் பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்...
ஆனால் மாணவர்கள் தங்கள் லட்சியத்தை மறந்து போகிறார்கள். குடிபழக்கம், ஆடம்பர வாழ்க்கையில் சிக்கி சீரழிகிறார்கள்
குடிப்பதே பேஷன்... தாதா போல் காட்டிக் கொள்வதே கவுரவம்... என்ற மனோபாவம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் படிப்பின் மீது மோகம் குறைகிறது.
இதை தவறு என்று யார் தடுத்தாலும் அவர்களை ஒரு கை பார்த்து விடுவது... என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
ஓய்வு நேரத்தில் மாணவர்கள் நல்ல புத்தகங்களை படிக்கும் எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.
சினிமா, கோளிக்கை என்று பொழுதை கழிக்கிறார்கள். இவை எல்லாமே அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மழுங்கடிக்கிறது.
உளவியலாளர்கள் பல்வேறு குறைகளை சுட்டி காட்டுகிறார்கள். குழந்தைகளை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறு வயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் மனகட்டுப்பாட்டுக்கு தியானம் அவசியம். பள்ளி பருவத்தில் இருந்தே இதை கட்டாயமாக்க வேண்டும் என்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் சாதி, மதம் என்ற நச்சு விதைகளும் விதைக்கப்படுகிறது. இதுவும் மாணவர்களை தவறான பாதைக்கு இழுக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் எத்தனையோ சாதனைகள் படைத்துவிட்டு கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறார். அவருக்காக கண்ணீர் வடிக்கிறான். தன் மானசீக நடிகரின் படம் தோல்வியை தழுவினால் அழுகிறான். வெற்றி பெற்றால் பாலாபிசேம் செய்கிறான்.
கட்சி தலைவர்களுக்காக உயிரையும் பணயம் வைத்து ரோட்டுக்கு வந்து போராடுகிறான். தன் வாழ்ககை பற்றி மட்டும் சிந்திக்க மறந்துவிடுகிறானே...
மாணவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றால் மாணவர்கள் ‘எக்கேடும் கெட்டு போகட்டும்’ என்ற மனநிலைக்கு அவர்கள் சென்று விடுவார்கள். இது நாட்டுக்கே பேராபத்து.
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தனியார் கல்லூரி ஆசிரியர்களும் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 21–ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
பசுமையான நெல்வயலில் ஒரு சில பதர்களும் முளைக்கத்தான் செய்யும். அவற்றை பிடுங்கி வீசிவிட்டு பயிரை காக்கும் கடமையை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.
சில கல்லூரிகளில் அபராதம், கெடுபிடிகள், பெற்றோரை அழைத்து அவமானப்படுத்துதல் போன்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. இதுவும் மாணவர்களை எல்லை மீற செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களை நல்வழிப்படுத்தும் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இந்த நாடே இருக்குது தம்பி’

No comments:

Post a Comment


web stats

web stats