Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும், பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன்.
2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது.
அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மொத்தம் 150. இந்தத் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றால் அதற்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 120 முதல் 135 மதிபெண்ணுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 105 முதல் 119 மதிப்பெண்ணுக்கு, 48 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 90 முதல் 104 மதிப்பெண்ணுக்கு 42 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
நான் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை. இதற்கு மேற்குறிப்பிட்ட நான்கு தேர்வுகளில் நான் பெற்ற உண்மையான மதிப்பெண்களுக்கு ஏற்ற விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படாததே காரணம்.
தகுதி உள்ள நபர்கள் பணி நியமனத்துக்கு பரிசீலனை செய்யபடவில்லை. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.14) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜராகினார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment


web stats

web stats