Tuesday, 1 July 2014

16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இங்கு, ஏழு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி இடைநின்ற குழந்தைகள் மீட்கப்பட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் படிப்பறிவு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் மாதத்துக்கு 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது.உண்டு உறைவிட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அவர்கள் மேல்நிலைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படுகிறது.எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மார்ச் மாதம் வரை உண்டு உறைவிட பள்ளிகளிலும், ஏப்ரல் மாதம் மட்டும், மாணவ, மாணவிகளின் ஊருக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு, மேல்நிலைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.

இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் உண்டு உறைவிட பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதியுதவி அளித்து வருகிறது. மேலும் தனியார் அமைப்புகளிடம் நன்கொடை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உண்டுஉறைவிட பள்ளி நடத்தும் தனியார் தன்னார்வ அமைப்புகள், அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீட்டு கல்வியறிவு வழங்க வேண்டும்.ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பல உண்டு உறைவிட பள்ளிகள், மற்ற யூனியனில் இருந்தும் குழந்தைகளை அழைத்து வருகின்றன. மேலும் உண்டு உறைவிட பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி அனைவருக்கு கல்வி இயக்கத்திடம் இருந்து முறைகேடாக பணம் வாங்கப்படுகிறது.அவ்வப்போது, மாணவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளிடம் மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை. மாணவன் ஊருக்கு சென்றுள்ளதாக கூறி உண்டு உறைவிட பள்ளி நிர்வாகம் பொய் சொல்லி வந்தது.

இந்நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் சசிகலா, கடந்த 16ம் தேதி இரவு முதல் 17ம் தேதி மாலை வரை முன் அறிவிப்பின்றி 19 உண்டு உறைவிட பள்ளிகளில் ஆய்வு செய்தார்.ஆய்வில், தன்னார்வ ஆசிரியர்கள் இல்லாமை, கழிப்பறை வசதி இன்மை, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் உரிமை பெறாதது, இடவசதி இன்மை, மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இன்மை, கட்டிட உரிமை சான்று இன்மை, போலீயான ரசீது பராமரிப்பு, உணவு பொருள் இருப்பு பதிவேடு இன்மை போன்ற பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.இதையடுத்து, இணை இயக்குனர் சசிகலா உத்தரவின் பேரில், ஓசூர் தளி அட்கோவில் உள்ள நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரம், பர்கூர் யூனியனில் உள்ள அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த உண்டு உறைவிட பள்ளி, என 16 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இந்த பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி யூனியனுக்கு உட்பட்ட கரியசந்திரம், கெலமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட தட்டகரை மற்றும் இருதுகோட்டை என மூன்று உண்டு உறைவிட பள்ளிகள் மட்டும் தற்காலிகமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats