5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 48 பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும் 1000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமலும் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் அங்கீகாரம் தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் புதுப்பித்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கோவை கணபதி பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 23 ஆண்டுகளாக குமாரசாமி மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 23 வகுப்பறை உள்ளன. எல். கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 750 மாணவர்கள் படித்து வருகின்றனர்; 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக பள்ளியை மூடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறுகையில், "பள்ளி நிர்வாகம் திடீர் என்று பள்ளியை மூடப்போவதாக தனித்தனியாக பெற்றோர்களை அழைத்து அறிவித்து வருகிறது. எனது இரு மகன்கள், இப்பள்ளியில் படிக்கின்றனர். மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் இடம் கிடைக்குமா என்பதும், அவ்வாறு கிடைத்தாலும் புதிய பள்ளிக்கான கட்டணம், நன்கொடை, புதிய சீருடை என பல சிரமங்கள் உள்ளன.
பிற பள்ளிகளில், இடம் கிடைக்க முழு பொறுப்பையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும், எங்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை பணத்தை திருப்பி தரவேண்டும்" என்றார்.
பள்ளியின் முதல்வர் பிரவீண் கூறுகையில், "நிதி பற்றாக்குறையின் காரணமாக பள்ளியை மூட உள்ளோம். அங்கீகாரம் புதுப்பிக்கவும், மேற்கொள்ள வேண்டிய இதர பணிகளுக்கும் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு மேற்கொண்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இயலாததால், பள்ளியை முறைப்படி மூட அனுமதி கேட்டுள்ளோம். பெற்றோர்களுக்கும், முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ரங்கராஜன் கூறுகையில், "பள்ளி நிர்வாகம், பள்ளியை மூடுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதை சென்னைக்கு அனுப்பியுள்ளோம். தலைமை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats