5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 21 December 2013

‘அட்மிஷன்’ பதற்றம்அதற்குள் ஆரம்பம்!

புதிய கல்வியாண்டு வருகிறதென்றால் கூடவே பெற்றோர்களுக்குப் பதற்றங்களும் வந்துவிடும். குறிப்பாக முதல் முறையாகப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டியவர்களும், வேறு பள்ளிக்கு மாற்ற விரும்புகிறவர்களும் அடைகிற மன உளைச்சல்களுக்கு அளவே இல்லை. இதில் கூடுதல் கொடுமையாக, பல தனியார் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பணமாகமாற்றுகிற வேலை ஆரம்பமாகிவிடுகிறது. சட்டம், அரசாணை எதையும் பொருட்படுத்தாமல் இது நடைபெறுகிறது.

பொதுவாக ஒரு கல்வியாண்டு என்பது ஜூன்மாதம் தொடங்கி மே மாதம் முடிகிறது. பணிமாற்றம், குடியிருப்பு மாற்றம் போன்ற காரணங்களால் இடம் மாறக்கூடிய பெற்றோர்களுக்கு உதவியாக, ஒவ்வொரு மே மாதமும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதே சரியான நடைமுறை. இந்த நடைமுறையை அரசுப்பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் பின்பற்றுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகள், குறிப்பாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளும், மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிகளும் இதைப் புறக்கணிக்கின்றன. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு ஐந்து அல்லது ஆறு மாதங்கள் இருக்கிறபோதே அத்தகைய பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டார்கள் அல்லது விண்ணப்பப் படிவங்களை வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டிய பள்ளிகள், தங்களது வகுப்புகள், மொத்த மாணவர் எண்ணிக்கை, இட ஒதுக்கீட்டு எண்ணிக்கை ஆகிய தகவல்களை ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டும்; அதன் பிறகே விண்ணப்பப் படிவங்களைக் கட்டணமின்றி வழங்க வேண்டும், ஒதுக்கீட்டு எண்ணிக்கைக்கு மேல் விண்ணப்பங்கள் வருமானால் குலுக்கல் முறையில் முடிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை 2013 ஏப்ரல் 1 தேதியிட்ட அரசாணையில் வரையறுத்துள்ளது. இதையெல்லாம் வெளிப்படையான நடைமுறையாக மேற்கொள்ளவும் அந்த அரசாணை வலியுறுத்துகிறது.ஆனால் பல தனியார் நிர்வாகங்கள் இப்போதே விண்ணப்பப் படிவங்கள் விற்பனை, நேர்முகத் தேர்வு முதலியவற்றைத் தொடங்கிவிட்டன. இது பெற்றோருக்கு திடீர் சுமை, குழந்தைகளுக்கு வீணான மன அழுத்தம் என்பதோடு, அரசுக்கு எதிரான பகிரங்க சவால் என்றே சொல்ல வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தை மீறுகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படையான அறிவிப்பு எதுவும் இல்லாமலே செய்வதால், சட்டவிரோதச் செயல் என்றே கொள்ள வேண்டும்.உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறையின் கண்காணிப்பு, விதிகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவதோடு, சட்ட மீறலுக்கு எதிரான நடவடிக்கைகளும் கறாராக மேற்கொள்ளப்பட வேண்டும். அதே வேளையில், போதிய ஆசிரியர்கள் நியமனம், முழுமையான உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் பொதுப்பள்ளி முறையை வலுப்படுத்தி நம்பிக்கையானதொரு கல்விச் சூழல் உருவாக்கப்படுவதோடும் இணைந்ததே இந்தப் பிரச்சனை.

No comments:

Post a Comment


web stats

web stats