5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Wednesday, 18 December 2013

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்

தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வு முறைகளில் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 பொதுதேர்வுகள் வரும் மார்ச் 3ம் தேதி துவங்கி மார்ச் 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மார்ச் 26ல் துவங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரையும் நடக்கும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வு எழுதுவோர் பட்டியல் விபரம் ஏற்கனவே தோராயமாக கேட்கப்பட்டு தற்போது இறுதி பட்டியல் கேட்கப்பட்டும் முழு விபரத்தையும் தனித்தனியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆன்லைனில் இதனை அனுப்புவதற்கான படிவம் விபரம் நேற்று அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
அந்த படிவத்தின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் விபரத்தை அனுப்பி வைக்கும் பணியினை அதிகாரிகள் துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.இந் நிலையில் தேர்வில் சில பள்ளிகளில் முறைகேடு புகார் திடீர், திடீரென ஏற்படுவதால் அதனை முற்றிலுமாக ஒழித்து கட்டி நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்வினை சிறப்பாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக முதல் முறையாக இதுவரை இருந்த சில நடைமுறைகளை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தேர்வு அறையிலும் கண்டிப்பாக 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வைக்க வேண்டும். அதற்கு மேல் எண்ணிக்கையில் மாணவர்களை அனுமதிக்க கூடாது.ஒரு மையத்தில் உதாரணத்திற்கு 145 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்றால் 7 அறையில் தலா 20 மாணவர்களையும், ஒரு அறையில் 5 மாணவர்களும் தேர்வு எழுத வைக்க வேண்டும். 
இதேபோல் தேர்வு அறையின் கண்காணிப்பாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அதில் சீனியர்கள், தலைமையாசிரியர்கள் போன்றோர் பறக்கும்படைக்கு நியமிக்கப்படுவர். இந்த நியமனம் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அளவில் தேர்வு செய்து கொள்வர்.ஆனால் வரும் தேர்வுக்கு ஹால் சூப்ரவைசர்கள், பறக்கும்படைக்கு யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை சென்னையில் உள்ள இயக்குனர் நேரடி கண்காணிப்பில் அவர்களே தேர்வு செய்வர். 
தேர்வுக்கு பயன்படுத்தக் கூடிய ஆசிரியர்கள் லிஸ்ட் மட்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அனுப்பி வைத்து விட வேண்டும்.எந்த மையத்திற்கு எந்த ஆசிரியர் சூப்ரவைசர், பறக்கும்படையில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்த விபரத்தை இயக்குனர் தேர்வு செய்து அனுப்புவார். அதன் அடிப்படையில் தான் தேர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த முறையும் புதியதாக வரும் தேர்வில் அமல்படுத்தப்படுகிறது.இதே போல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் தேர்வும் சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அளவில் தான் நடக்கிறது. 
இதன் மூலம் எனக்கு உடல்நிலை சரியில்லை உள்ளிட்ட பொய்யான காரணங்களை சொல்லி விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் வரும் தேர்வு மூலம் அதிரடி ஆப்பு வைக்கப்பட்டிருப்பதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.விடைத்தாள் திருத்துவோர் பட்டியல் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தான் வரும். அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விடைத்தாள் திருத்துவதற்கு சென்று ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இயக்குனர் அளவில் தான் இந்த முடிவு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய முறை மூலம் பல்வேறு வேலைகள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் புதிய அதிரடி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு நடக்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment


web stats

web stats