5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Thursday, 9 January 2014

5 ஆண்டுகள் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல் அழிக்கப்படும்: தேர்வுத் துறை எச்சரிக்கை

2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வாங்காமல் உள்ள பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் பெறாமல் உள்ளதால், அவற்றை அழித்துவிட அரசுத் தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிக்கும்போது முந்தைய தேர்வின் மதிப்பெண் பட்டியல்களை தேர்வுத் துறைக்கு அனுப்புவது வழக்கம். மேலும், தனித் தேர்வர்களாக தேர்வு எழுதிய பிறகு அதற்கான மதிப்பெண் பட்டியல்களையும் சிலர் வாங்குவதில்லை.
இதன்படி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த பிளஸ் 2 தேர்வுகளில் தனித் தேர்வர்களாக எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிக்கும்போது அனுப்பிய மதிப்பெண் பட்டியல்கள் தேர்வுத் துறையில் இன்னும் நிலுவையில் உள்ளன. தனித் தேர்வர்கள் அந்த மதிப்பெண் பட்டியல்களை திரும்ப பெறாமல் உள்ளனர். இது போல ஆயிரக்கணக்கில் மதிப்பெண் பட்டியல்கள் தேர்வுத் துறையில் தேங்கிக் கிடக்கின்றன. அதனால் அவற்றை அழித்துவிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் தனித் தேர்வு எழுதிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது குறித்து அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளபடி 2014 ஜனவரி 3ம் தேதியில் இருந்து 3 மாத காலத்துக்குள் அந்த மதிப்பெண் பட்டியல்களை திரும்ப பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல்களை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல்களை அழித்துவிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதுவரை மதிப்பெண் பட்டியல்களை திரும்ப பெறாத தனித் தேர்வர்கள் அவற்றை திரும்ப பெற விரும்பினால், அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கூடுதல் செயலாளர் (மேனிலை) எச்9 பிரிவு, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற அலுவலரை அணுகி பெறலாம். மேலும், மாணவர்கள் தேர்வு எழுதிய வருடம், மாதம், பதிவெண், மையம் ஆகிய விவரங்களை தெரிவித்து ரூ.40க்கு தபால் தலை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்து மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். அப்படி பெறாத மதிப்பெண் பட்டியல்கள் எந்த அறிவிப்பும் இன்றி அழிக்கப்பட உள்ளன.


இனி வரும் காலங்களில் இது போல தேர்வுத் துறையில் தேங்கும் மதிப்பெண் பட்டியல்கள் 2 ஆண்டுகள் மட்டுமே தேர்வுத் துறையில் வைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் அவை அழிக்கப்படும்.

No comments:

Post a Comment


web stats

web stats