5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Tuesday, 31 December 2013

2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு

ஜனவரி
04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில்  "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது
05: "பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்" என, புதுச்சேரி கல்வியமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு.
06: "தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது" என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை தெரிவிப்பு.
07: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் நடு சாலையில் அரிவாளால் ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இந்த பயங்கர காட்சியை பார்த்த, பயணிகள் அலறியடித்தபடி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
09: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப்பட்டார். இவர், பல்கலையின் 43 வது துணைவேந்தர் ஆவார்.
10: இயற்கை சாயம் தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சியை செய்து வரும் அண்ணா பல்கலை எம்.டெக். மாணவியர் 3 பேர் இயற்கை சாயம் கண்டுபிடிப்பு.
14: இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் புள்ளி விவரம் வெளியீடு.
பேச்சுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆட்டிசம் பயிற்சி அளிப்பதற்கான கருவியை சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் என்பவர் உருவாக்கி உள்ளார்.
18: அமெரிக்காவைச் சேர்ந்த "மைக்ரோசாப்ட்" நிறுவனம் உலகளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில் தமிழக சிறுவன் பிரணவ், முதலிடத்தைப் பெற்று சாதனை.
19: தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவன் உட்பட நாடு முழுவதும் 22 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுக்கு தேர்வு.
23: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில் தமிழகத்தை சேர்ந்த பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி.
24: முகப்பேரில் உள்ள தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி, தி.நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மையம், செங்கல்பட்டு கீரப்பாக்கம் ஆசான் பல் மருத்துவக் கல்லூரி, குமாரபாளையம் ஜே.கே.கே., பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை.
25: திண்டுக்கல்லில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்தது குறித்து ஜனவரி 3ம் தேதி தினமலர் நாளிதழில் படம் வெளியானது. இதை, மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்தது. இவ்வழக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டதாக ஜெயச்சந்திரன் எஸ்.பி., பதில் மனு.
பிப்ரவரி
03: குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கான பணிக்கு தலித் பெண் நியமிக்கப்பட்டுள்ளதால் அங்கு படிக்கும் மாணவர்கள், மதிய உணவை சாப்பிட மறுப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
07: அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை 65லிருந்து 70 ஆக உயர்த்தும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல்.
15: சீனாவில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க அந்நாட்டு அரசு தடை.
20: "கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது பள்ளிகளுக்கு ஆகும் செலவை,கல்விக் கட்டண நிர்ணயக் குழு கருத்தில் கொள்ள வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவு.
21: நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்தது.
28: "தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில் "ஏ.பி.சி.டி" என, நான்கு வகையான கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும்" என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு.
புதுடில்லி: நாடு முழுவதும் வேலைவாய்ப்ற்றவர்களின் எண்ணிக்‌கை 2.8 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
மார்ச்
06:  லண்டனில் நடைபெற்ற இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை.
07: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியீடு.
08: மும்பையில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் உத்தரவு.
09: மக்காத பிளாஸ்டிக் கழிவுகளான கேரிபேக், வாட்டர் பாட்டில்களை நுண்ணுயிரை பயன்படுத்தி சிதைவடைய செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்ட மதுரை போராசிரியர் வி.பிரபாகரனுக்கு டில்லி விஞ்ஞானிகள் அமைப்பு சார்பில் அச்யூமென்ட் விருது வழங்கப்பட்டது.
11: "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சம உரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
15: சென்னை மத்திய சிறையில் உள்ள சமுதாய கல்லூரிகள் மூலம் கல்வி கற்ற சிறை கைதிகள் 175 பேர் பட்டய படிப்பில் தேர்ச்சி.
17: "பீட்சா, பர்கர் போன்ற "பாஸ்ட் புட்" உணவுகளை பள்ளி கேன்டீன்களில் இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்" என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை.
18: இலங்கை விவகாரத்தில் கலை, அறிவியல், சட்டம் மற்றும் வேளாண் மாணவர்களோடு பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு.
20: பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் "பிட்" அடித்த 1,600 மாணவர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர். இவர்கள் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதோடு "பிட்" அடிப்பதற்கு உதவியதாக மாணவர்களின் பெற்றோர் 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.
30: "தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன் இந்திய வரலாறு, சுதந்திர போராட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய கலாசாரம் குறித்த பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளோம்" என டில்லி அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா அறிவிப்பு.
ஏப்ரல்
01: டில்லியைச் சேர்ந்த மாணவி 23 வயதிலேயே சி.ஏ., - சி.எஸ்., - சி.டபிள்யூ.ஏ., என கணக்கியல் தொடர்பான மூன்று பட்டங்களில் தேர்ச்சி பெற்று சாதனை.
02: காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமிக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
04: "அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.
07: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக துணைவேந்தர் ராமநாதனை "இடை நீக்கம்" செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு.
போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியது.
18: தமிழகத்தில் புதியதாக ஆயிரத்து 591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி.
திருப்புத்தூர்: குழந்தைகளை நல்வழிப்படுத்த, நீதிக் கதைகள் கூறும் தன்னார்வ கதை சொல்லி அமைப்புகளை கிராம நூலகங்களில், ஏற்படுத்த, தமிழக பொது நூலகத்துறை முயற்சி.
24: "காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பல்கலைக் கழகம், சென்னை அருகே அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்பு.
25: "கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கிற காரணத்துக்காக ஒரு வீட்டுக்கு "கமர்ஷியல்" மின் கட்டணம் வசூலிக்கக்கூடாது" என்று மின் வாரிய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
29: சிங்கப்பூரில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  ஆங்கிலோ-சைனீஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அஸ்வின் சிவக்குமார், 12, என்ற மாணவர் "சாம்பியன்ஷிப்" பட்டத்தை வென்றார்.
30: கட்டுரைப்போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாணவி, "பரிசு வழங்கும் தேதியில் மாற்றமில்லை என்று அறிவித்ததால்" பொதுத்தேர்வை எழுதாமல் ஜனாதிபதியிடம் பரிசு பெற சென்றார்.
மே
06: பசுவின் கோமியத்தில் இருந்து மின் உற்பத்தி செய்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் சரவணக்குமார் சாதனை.
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருந்து அறிவியல் பல்கலையில் ரூ.6.48 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.
11: "அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.
"ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியை அமல்படுத்தக்கூடாது; தாய் மொழியான தமிழ்வழி கல்வியைத் தான் அமல்படுத்த வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் சட்டசபையில் வலியுறுத்தினார்.
22: அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண் 20 - 30 வினாடிகளில் மொபைல் போனுக்குத் தேவையான மின்சாரத்தை சார்ஜ் ஏற்றும் கெபாசிட்டர் கருவியை கண்டுபிடித்தார்.
23: மத்திய பிரதேசத்தில் கண் பார்வையற்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
24: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் எம்.ராஜாராம் நியமிக்கப்பட்டார்.
29: "தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் வரும் கல்வியாண்டில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்" என்ற அரசு உத்தரவை வாபஸ் பெறும்படி உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.
ஜீன்
05: "எம்.ஏ. பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் பட்டப் படிப்பு, எம்.ஏ., வரலாறு பட்ட படிப்புக்கு இணையானது அல்ல என்ற அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும்" என சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்தார்.
08: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்த பாடப் புத்தகத்தில் கேரளாவின் குறிப்பிட்ட சமுதாயங்கள் மற்றும் அந்த சமுதாயங்களின் தலைவர்கள் குறித்து இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்ட்டது.
ஜீலை
10: விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் ராஜராஜசோழன், விஷ்ணுராம், வித்யாதரன் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் காற்றின் வேகத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவியைக் கண்டுபிடித்தனர்.
17:  பீகாரில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 16 பேர்  இறந்தனர்.
18: சமூக வலைதளங்களில் ஒன்றான "பேஸ்புக்"கில் 13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு துவங்க டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு.
22: "கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே கணக்குத் துவக்க வேண்டும்" என அரசு கட்டாய உத்தரவு.
28: "இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை" என மின்னஞ்சலை கண்டுபிடித்த விருதுநகர் முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார்.
ஆகஸ்ட்
02: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
08: "தமிழகத்தில் இயற்கை விவசாயத்துக்கு எதிராக விவசாயக் கல்வி கற்பிக்கப்படுகிறது" என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கவலை தெரிவித்தார்.
14: "மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யும்" என, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
இந்தியாவில் "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.
22: தெலுங்கானா உருவாக்க வேண்டுமென கோரி நடந்த போராட்டத்தால் இன்ஜினியரிங் உட்பட தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. சொந்த மாநிலத்தில் படித்தால் உருப்பட முடியாது என நினைத்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு மாநிலங்களில் உள்ள தொழிற்கல்லூரிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
23: பிற மொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன.
26: "குடி தண்ணீர் பாட்டில் விலையே 10 ரூபாயாக உள்ள போது பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல" என பார்லிமென்ட் குழு விமர்சித்தது.
27: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக 24 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியது.
மருத்துவ மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த இரட்டை மதிப்பீட்டு முறையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
செப்டம்பர்
06: "சீனாவின் அலுவலக ‌மொழியான மாண்டரின் மொழியை சுமார் 30 சதவீத மக்கள் பேசுவதி்ல்லை" என அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் ‌தெரிவித்தது.
08: "அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்" என்று கோவை மாவட்டம் பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவித்தார்.
11: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில் அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
16:  மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால் "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு.
20: வேலூர், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறையை உடைத்து, முக்கிய ஆவணங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
அக்டோபர்
01: "டாக்டர்களின் சான்றிதழ்களை நோயாளிகள் சரிபார்க்கும் நேரம் வரலாம்; எனவே, மருத்துவ கல்லூரிகளை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் உத்தரவு.
03: "சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., சித்தா பட்ட மேற்படிப்புகளில், வெளிநாட்டு மாணவர்களும் சேரலாம்" என அறிவிப்பு.
09: : தமிழக மீன் வள பல்கலையும், அமெரிக்காவின் ஆபர்ன் பல்கலையும் தூத்துக்குடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.
10: மானாமதுரையில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களின் பெற்றோர் அபராதம் கட்டினர். தண்டனையாக மாணவர்கள் ஐந்து பேர், 10 திருக்குறளை 10 முறை எழுதினர்.
11: தூத்துக்குடி அருகே வல்லநாட்டில், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர், மாணவர்கள் மூன்று பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
26: பெண்களுக்கான மிகப் பெரிய பல்கலைக்கழகம், சவுதி அரேபியாவில் கட்டப்பட்டுள்ளது. ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகங்களிலும் சி.சி.டி.வி.,க்களை பொருத்தி கண்காணிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்தது.
30: தமிழகத்தில் இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
31: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நவம்பர்
05: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2:38 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
06: மிக அதிகளவிலான கல்லூரிகளை தன்னுடன் இணைத்ததன் மூலமாக புனே பல்கலைக்கழகம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய பல்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மும்பை பல்கலையை, புனே பல்கலை முந்தியுள்ளது.
10:நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம் பெற்றது.
11: இந்தியாவில் அதிக பிஎச்.டி., மாணவர்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தது.
12: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் "ராகிங்" புகார் கொடுத்த மாணவி மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
13: தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார் இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
16: அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்திய கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
26: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவின் மேற்பகுதியானது தென்னிந்தியா மற்றும் ஆப்ரிக்காவின் மொசாம்பிக் நாட்டைப் போன்று உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
27: "சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் அறிவிப்பு.
29: "தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது" என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தியது.
30: "நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலை வாய்ப்பிலாமல் உள்ளனர்" என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.
தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என அரசு உத்தரவிட்டது.

Courtesy : Dinamalar

No comments:

Post a Comment


web stats

web stats